Sunday, November 30, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (14)


அத்தியாயம் 14

அவள் எனது கைவிரல்களை இருக்கப் பற்றி இருந்தாள். நேரம் ஆக ஆக பற்றி இருந்த விரல்களின் இருக்கம் அதிகமாவதை உணர்ந்தேன். அவளை நோக்கினேன் கண்களை மூடியபடி என் தோள் மீது சாய்ந்திருந்தாள். மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்தது. அவர்களுக்கான பேருந்து விரைவில் வந்துவிட்டதாக அறிந்தேன். அடிக்கடி கண்களை என் கைக்கடிகாரத்தின் முட்களிடையே ஓடவிட்டுக் கொண்டிருந்தேன். வெளியே லேசான தூரள் போட்டுக் கொண்டிருந்தது வானம். ஈரப்பதம் நிறைந்தக் காற்று இதமாக முகத்தை வருடியது. மின்னல் கீற்றுகள் வானத்தைக் கிழித்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்தன.

அவள் கைப்பிடியில் இருந்து லேசாக என்னை விடுவித்தேன். தலை நிமிர்த்தி என் முகத்தைப் பார்த்தாள்.

"காபி ஏதும் வாங்கி வரவா?" புன்னகைத்தபடி முகத்தில் சரிந்திருந்த முடியை காதிடுக்கினில் கோதிவிட்டுக் கொண்டாள்.

"எனக்கு தூக்க தூக்கமா இருக்கு", கொஞ்சும் குரலில் பதிலளித்தாள்.

" 'பஸ்' ஏரினதும் நல்லா தூங்கலாமே?", என்றேன்.

" நான் 'டிராவல்' செஞ்சி ரொம்ப நாளாகுது. இந்த முறை வீட்டுக்கு போக அசௌகரியமா இருக்கு".

"அப்ப நானும் கூட வரவா?"

"ம்ம்ம்... நான் அன்னிக்கு கூப்பிட்ட போது 'லீவ்' கிடைக்காது, வேலை இருக்கு, அது இதுனு 1008 காரணம் சொன்ன, இப்ப என்னவாம்?"

"அப்படிலாம் ஏதும் இல்லை, இந்த முறை எந்த தொந்தரவும் இல்லாமல் உன் விடுமுறை இருக்கட்டும்... ஆனா இப்போதைக்கு அப்பாக்கிட்ட நம்ம பத்தி ஒன்னும் சொல்ல வேணாம் 'பிலிஸ்'.

அவள் முகம் சற்றே சுருங்கியது, "ஏன் உனக்கு பிடிக்கலையா?".

"பிடிக்கலைன்னு இல்லை, இப்போதைக்கு வேண்டாம்னு நினைக்கிறேன்... இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.." அவள் முகம் சுழித்தாள்.

"சரி... நான் அப்பாகிட்ட ஏதும் சொல்லல... ஆனா நீ மறக்காம எனக்கு போன் பண்ணு..." என் கைகளை மீண்டும் இருக்கப் பற்றிக் கொண்டாள்.

"உன்னோட டிக்கட் எங்க?".

" பேக்ல இருக்கு", தனது தோளில் மாட்டி இருந்த பணப்பையைக் காட்டினாள்.

சற்று நேரத்தில் பேருந்தும் வந்தது. அவளது துணி பையை எடுத்துக் கொண்டு பேருந்து நிற்குமிடம் போனேன். கிளம்புவதற்கு இன்னும் ஒரு சில நிமிடங்கள் இருந்தது. நளினாவின் முகத்தில் சோகம் அப்பிக் கிடந்தது. என்னை அணைத்து சட்டென கன்னத்தில் இதழ்களை பதித்தாள். அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்திருந்தது.

அவள் கிளம்பியதும் எனது கரை நோக்கி நடக்கலானேன். மழை தனது மெல்லிய தூறலை இன்னமும் விட்டபாடில்லை. நளினாவின் முத்தத் தடங்கள் அழியாமல் இருக்கவோ என்னவோ அவசர அவசரமாக காருக்குள் புகுந்துக் கொண்டேன்.

மீண்டும் மீண்டும் அவளது நினைவுகள் என்னைத் துரத்திக் கொண்டே இருந்தன. அவளும் இப்படி தான் என்னை நினைத்துக் கொண்டிருப்பாளா? இல்லை தூங்கியிருப்பாளா? அவளை தனிமையில் விட்டுவந்த நானும் இனி தமிமையில் தான் இருக்கப் போகிறேன். இல்லை மனைவியென பெயர் கொண்டவள் உன்னோடு இருக்கிறாள் என்றது மனம்.

வீட்டிற்கு வந்து சேர்ந்த போது இரவு 11.30ஆகிவிட்டது. அறைக்கதவை திறந்த போது கண்கொள்ளா திருக்கோலத்தில் நந்தினி படுத்திருக்கக் கண்டேன். கதவு திறந்த சத்தம் மேலிட சட்டென எழுந்துவிட்டாள். என்னைக் கண்டு அவளும் திடுக்கிட்டிருக்க வேண்டும். கையில் கிடைத்த போர்வையைக் கொண்டு மெல்லிய இரவு உடை கொண்டிருந்த தன் மேனியை மறைத்துக் கொண்டாள்.

" நீங்க வர 'லேட்டாகும்னு நினைச்சேன்", அவள் பேசினாள்.

நானும் பேசத்தான் நினைத்தேன். ஆனால் குரல் ஒலி அடித் தொண்டையில் அடைத்துக் கொண்டு வர மறுத்தது.

"சாவி தேடுறிங்களா? அந்த மேசை மேல இருக்கு", என்றாள்.

நெஞ்சு படபடத்துக் கொண்டது. ஏன் என்று தெரியவில்லை.

அந்த சிறிய அறையைத் திறந்து கதவைச் சாத்திக் கொண்டு படுத்தேன். நந்தினி தன்னை இழுத்துப் போர்த்திக் கொண்ட காட்சி மனத்திரையில் ஓடியது. நீண்ட பெருமூச்சைவிட்டேன். போர்வையை போர்த்திக் கொண்டேன். வெளியே மழையின் சத்தம் வேகமாக இருந்தது.

தொடரும்...

Thursday, November 20, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (13)

அத்தியாயம் 13

யாருக்குத் தான் பிரச்சனையில்லை. நமது மனம் ஆறுதல் பெற ஒரு தோள் கிடைக்குமா என ஏங்குகிறோம். அவருக்கு என்ன பிரச்சனையோ என அறிவார் இல்லை. முரளி என்னை நாடிய போது எனக்கு அப்படித்தான் தோனியது.

"சொல்லு... மறுபடியும் 'லவ்'ல பிரச்சனையா?"

"இல்லை டா! எங்க அம்மா தான்... அவுங்களுக்கு தெரிஞ்சவங்க மகளுக்கு என்னைக் கல்யாணம் பேசி முடிக்க நினைக்கிறாங்க..".

"நல்ல விசயம் தானே?".

"என்னடா நல்லது? உனக்கு தான் என்னைத் தெரியுமே! யாருன்னே முகம் தெரியாதவங்கள எப்படிடா கல்யாணம் பண்ணிக்க முடியும்? அதுவும் பெரியவங்களுக்கு நம்ம 'டேஸ்ட்' தெரியாது...".

"நீ பொண்ணப் பார்த்தியா
?" அவன் இல்லையெனத் தலையசைத்தான்.

"பார்க்காம எப்படி முடிவு பண்ணுன
?"

" எதுக்குடா பார்க்கனும்
?... எனக்கு விருப்பமில்ல... அம்மாவோட தொந்தரவு தான் தாங்க முடியல... சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றாங்க... இப்ப எனக்கு 28 வயசு தான் ஆகுது... இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு நினைக்கிறேன்".

எனக்கு 25 தானே ஆகிறது... கணவன் எனும் முத்திரை என் மீது குத்தப்பட்டுவிட்டது. இது இவனுக்கு தெரிந்தால்...
?

" இந்த வயசுல கல்யாணம் வேண்டாம்னு சொன்னா எப்பதான் பண்ணிக்க போற
?"

" தெரியல.. ஆனா இப்ப நான் தயாரா இல்லை".

" ஒரு பொண்ணயாவது உருப்படியா காதலிச்சிருக்கியா
? 'லவ்' பண்ணி கொஞ்ச நாள்ல பிரச்சனைனு சொல்லுவ... மறுபடியும் அடுத்தவ...".

" நீ பேசுவடா... எனக்கும் உன்னை மாதிரி
'லவ்வர்' கிடைச்சா நான் ஏன் புலம்ப பொறேன்... உனக்கு என் கவலை புரியாது".

முரளியின் பேச்சு எனக்கு நகைச்சுவையாக இருந்தது. எப்படிப்பட்ட பெண்ணாகட்டும்
, கொஞ்ச நாளில் பிரச்சனை, சண்டையெனச் சொல்லி விலகிக் கொள்வான்.

இந்த முரளி ஆண்களை வர்ணிப்பதை போல் தும்பி இனத்தைச் சேர்ந்தவன் என நினைக்கிறேன். இரண்டு மூன்று மாதத்திற்கொரு முறை அடுத்த பூவிற்கு தாவிவிடும் ரகம். சட்டையை மாற்றுவது போல் பெண்களை மாற்றிக் கொள்ளும் அவனுக்கு எந்தச் சட்டை சரியாய் இருக்குமென அறிவார் இல்லை. அவனை பேசிச் சமாளிக்க போதும் போதும் என்றாகிவிட்டது.

"சரி இந்த வாரம்
'சாட்டர்டே' 'ஃப்ரியா' இருப்பியா?".

"வெள்ளிக்கிழமை ராத்திரி நளினாவ வழியனுப்ப போறேன். வர
'லேட் ஆகும்.சனிக் கிழமை 'ஃப்ரியா' இருப்பனானு தெரியல".

"
நளினாவ எங்க வழியனுப்ப போற?"

"
அவ ஊருக்கு போறா".

"
அப்படினா நீ மறுபடியும் 'பேச்சுலர்'னு சொல்லு. பிரச்சனை இல்ல ஊர் சுத்தவும் ஆட்டம் போடவும் நான் 'ஜாய்ன்' பண்ணிக்கிறேன்". என்றான் கிண்டலாக.

நான் ஒன்றும் பேசாமல் சிரித்துமட்டும் வைத்தேன்.

அவன் மேலும் தொடர்ந்தான். "அப்படினா சனிக் கிழமை ராத்திரி உன் வீட்டுக்கு வந்திடுறேன். "பார்ட்டிய' 'ஓப்பன்' பண்ணிடலாம் 'ஓகேவா' ?".

சில காலமாக நான் மது அருந்துவதை விட்டுவிட்டேன். ஏன், எதனால் என்ற காரணங்கள் தெரியவில்லை. அவன் அப்படி கூறியதும் வீட்டில் சூழ்நிலை ஞாபகத்துக்கு வந்தது. அம்மாவும் நந்தினியும் உடன் இருக்கும் சமயத்தில் இந்த ஜந்து அங்கே வந்து தொலைத்தால் என் கதி அதோகதிதான்.

"
வேண்டாம் மச்சான். கஸ்டம்... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..." பட படவென வார்த்தைகளை உதிர்த்தேன்.

முரளியின் முகம் சுருங்கியது. என்ன நினைத்திருப்பான் என தெரியவில்லை.

"
சரி மச்சான்... நான் 'ஃப்ரியா' இருக்கும் போது உன் வீட்டு பக்கம் வந்துட்டு போறேன்."

"
எதுக்கும் வரத்துக்கு முன்ன எனக்கு போன் போடு", என்றேன்.

**********************

நந்தினியின் முகத்தைப் பார்த்தேன். பூசினாற் போன்ற முகம். பல வருடங்களுக்கு முன் பார்த்தைவிட எழில் மிகுந்து இருந்தாள். கண்களை மூடி தூங்கி இருந்தாலும் அதில் ஒரு வசீகரம் இருந்தது. அழகிய கழுத்து. காற்றாட விழுந்திருக்கும் அவள் கூந்தல்...

குரலை கனைக்கும் சத்தம் கேட்டது. அம்மா நின்றிருந்தார்.

"
அவளை எழுப்பாதட பாரி... பாவம் பயண களைப்புல அசந்து தூங்குறா..."

யார் எழுப்பினார்கள். இவள் ஏன் வரவேற்பு அறையில் இருக்கும் மெத்தை நாட்காலியிலேயே தூங்குகிறாள் என்று தான் பார்த்தேன். இச்சமயம் அம்மா என்னை பார்த்தது தான் வெட்கமாக போய்விட்டது. அம்மாவிடம் ஏதும் பேசாமல் மேல் மாடியில் இருக்கும் என் அறையை நோக்கி விரைந்தேன்.

"
தண்ணி சாப்பிடலையாப்பா?"

"
இருங்கம்மா குளிச்சிட்டு வரேன்", சோர்வாக பதிலளித்தேன்.

அறையில் புகுந்தவுடன் எதிரே இருந்த மெத்தை மீது தொப்பென விழுந்தேன். கடந்த சில நாட்களாக இந்தக் கட்டிலில் தான் என் கனவுகள் தொடர்ந்தன. இன்று நந்தினி வந்துவிட்டாள். இன்றிரவு முதல் மீண்டும் அந்த குட்டி அறையில் தான் எனது கனவுலக சாம்ராஜியம் தொடர வேண்டுமென்பது விதி. பரவாயில்லை. இந்த வருடம் வரைதானே. இந்த வருடம் முடிந்ததும் மீண்டும் பழைய பாரி தாசன் பிரவேசிப்பான்.

கொஞ்ச நேரம் படுத்திருந்தேன். பிறகு குளித்து கிளம்பினேன். அப்போது நந்தினி மேல் அறைக்கு வந்தாள்.

"
எனக்கு ரொம்ப தலைவலியா இருக்கு. நான் இங்க படுத்து தூங்கவா?" நான் தலையசைத்து வைத்தேன்.

"
உடம்புக்கு முடியலையா நந்தினி?".

"
எனக்கு எப்போதும் இப்படிதான். ரொம்ப தூரம் நடந்தாலே தலை வலி கொடுக்க ஆரம்பிச்சிடும். கொஞ்ச நேரம் தூங்கினா சரியாகிடும்" என்றாள்.
நான் ஏதும் பேசாமல் இருந்தேன். படுத்தவுடன் கண்களை மூடி அயர்ந்து போனாள்.

கட்டில் அருகே இருக்கும் சிறு விளக்கை போட்டேன். குளிரூட்டியின் அளவைக் குறைத்துவிட்டு போர்வையை அவள் மீது போர்த்திவிட்டேன். அறையின் விளக்கை அனைத்துவிட்டு கீழ் மாடிக்கு வந்த போது அம்மா தேநீரை சுவைத்தபடி இருந்தார்.

"
பாரி, நந்தினிக்கு உடம்பு சரி இல்லைப்பா". அவர் பேச்சை ஆமோதித்த விதமாய் தலையசைத்துவிட்டு நாட்காலியை இழுத்து போட்டு அமர்ந்தேன்.

"
முதல்ல அவ வாந்தி எடுத்தா", அம்மா என்னை பார்த்து சிரித்தபடி கூறினார்.

"
வாந்தியா... காய்ச்சலா இருக்குமோ...?"

"
உடம்பு சூடா இல்லை. ஒரு வேளை மாசமா இருக்கா போல...".

"
ஏம்மா நீங்க வேற... அவளுக்கு சின்ன வயசுல இருந்த மாதிரியே இன்னமும் ஒற்றைத் தலைவலி இருக்கு போல".

நந்தினிக்கு இளம் பிராயத்திலேயே இப்படி இருந்தது. கலைத்து போகுப்படியானால் அவளுக்கு தலைவலி ஏற்படும். பித்த வாந்தியும் எடுப்பாள். இதனாலேயெ அவளை வெளியே எங்கேனும் அழைத்துச் செல்ல வீட்டில் பயப்படுவார்கள். இன்னமும் அந்த பிரச்சனை அவளைவிட்டு நீங்கவில்லை என்றே அறிகிறேன்.

ஆனால் என் அம்மாவுக்குதான் என்னவெல்லாம் கனவுகள். அர்த்தமற்ற கனவுகள்.

"
டேய் பாரி அவளுக்கு நல்ல வேலையய பார்க்கனும்டா..".

"
என்ன வேலை? ஊர்ல நல்லா தானே வேலை பார்த்துகிட்டு இருந்தா? அந்த வேலைக்கு என்ன வந்துச்சு?".

"
அவ அந்த வேலைய விட்டுட்டா". அம்மா அப்படிச் சொன்னதும் நெற்றியைச் சுறுக்கினேன்.

அம்மா மேலும் தொடர்ந்தார். "என்னடா அப்படி பார்க்குற? அவ ஊர்ல வேலை செஞ்சிகிட்டு, நீ இங்க தனியா இருந்துகிட்டு நல்லாவா இருக்கு... உன் மாமா என்ன நினைப்பாரு... அதான் நந்தினிய வேலைய நிப்பாட்டி இங்கயே இருக்க சொல்லி அனுப்பிச்சிட்டாரு">

நான் என் பெரு மூச்சை அமைதியாக இறக்கி வைத்தேன்.

"
முதல்லயே அவகிட்ட கேட்டேன். ஏதாவ்து 'கிராணி' வேலை கிடைச்சா செய்யறதா சொல்றா... குழந்தை குட்டினு ஆன பிறகு வேணும்னா வேலைய விட்டுட்டு வீட்டோட இருக்கட்டும்".

அம்மாவின் பேச்சில் நிதர்சனம் இருந்தது. ஆனால் எனக்கு அது வேம்பாக கசத்தது.

"
உனக்கு தான் நிறைய பேர தெரியுமே... யார்கிட்டயாவது சொல்லி நல்ல வேலையா கிடைக்குமானு பாரு".

"
சரிமா நான் சொல்லி வைக்கிறேப்". நான் ஒப்புக்கு சொல்லி வைத்தேன். எனது பதில் அம்மாவுக்கு நிறைவை தந்திருக்கிறது என்பதை அவர் முகம் காட்டியது.

தேநீர் குடித்துவிட்டு சற்று நேரம் தொலைக்காட்சியைப் பார்த்தேன். மறுபடியும் மாடிக்குச் சென்று பார்த்த போது நந்தினி எழுந்துவிட்டிருப்பதைக் கண்டேன்.

"
இன்னும் தலைவலியா இருக்கா நந்தினி?" இல்லை என்பதாக தலையசைத்தாள்.

கட்டில் ஓரத்தில் பார்த்தேன். நந்தினியின் துணிப் பை இருந்தது. மதியம் நடந்த சம்பவத்துக்கு என் மனம் இட்டுச் சென்றது. அவளை அழைத்து வந்தவன் யார் என கேட்கலாமா என்று நினைத்தேன். அதைக் கேட்க உரிமை இல்லாதது போல் உணர்ந்தேன்.

"
நீங்க எங்க கிளம்புறிங்க". நான் பேச நினைத்துக் கொண்டிருக்கையில். நந்தினி என்னிடம் கேள்வியைக் கேட்டாள்.

"
கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன்".

"
நானும் கூட வரவா? என்னையும் அழைச்சிகிட்டு போவிங்களா?" எனக் கனிவாக கேட்டாள்.

வீட்டில் இருப்பது அவளுக்கு இறுக்கமான சூழ்நிலையை உணர்த்துகிறது போலும். என்னுடன் வெளியே வர விரும்புகிறாள். அவளது கேள்வி எனக்கு நெருடலாக இருந்தது. என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. முக்கியமான விடயம் ஏதும் சொல்ல விரும்புகிறாளோ என்றும் உள்ளணர்வு சொல்லியது.

தொடரும்....

Thursday, November 6, 2008

60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (12)

அத்தியாயம் 12

நந்தினி ஊருக்கு கிளம்பி நான்கு நாட்களாகிவிட்டன. இப்போதெல்லாம் வேலையில் சரிவர கவனம் செலுத்த முடியாததை போன்ற எண்ணமே அடிக்கடி தோன்றி மறைகிறது. அன்று அலுவலகத்தில் இருந்த போது அம்மா தொலைபேசினார். நந்தினி ஊரில் இருந்து வருவதாகவும் பேருந்து நிலையத்திற்குச் சென்று என்னை அழைத்துவரும்படியும் கூறினார்.

அம்மா தொலைபேசிய போது காலை மணி 10.20. எப்படியும் நந்தினி இங்கு வந்தடைய இன்னும் 1.30 மணி நேரத்திற்கு மேலாகும். அலுவலக வேலைகள் தலைக்கு மேல் இருந்தது. நான் அவளைச் சென்றழைப்பது கடினம் என்றே கருதுகிறேன்.

"அம்மா! அவள டாக்ஸி பிடிச்சி வீட்டுக்கு வந்திட சொல்லுங்க. எனக்கு வேலை அதிகமா இருக்கு".

"டேய்! கிறுக்குப் பய மாதிரி பேசாதடா, பொண்டாட்டிய தனிய வர சொல்லுறியே. அவ இந்த ஊருக்கு புதுசு டா. ஆபீஸ்ல சொல்லிட்டு, அவள போய் அழைச்சிட்டு வா". நான் பயப்பட மாட்டேன் என தெரிந்தும் அதட்டலாகவே சொன்னார்.

இன்னும் சற்று நேரத்தில் முதலாளியுடனான சந்திப்பு தொடங்கிவிடும்.எந்நேரத்திலும் எனது மேசை மீதிருக்கும் இண்டர்காம் ஒலிக்கலாம். முதலாளி என்னை அழைக்கலாம். மேசை மீது தயார் படுத்தி வைத்திருந்த கோப்புகளை சரி பார்த்துக் கொண்டேன்.

அம்மாவின் நினைவுறுத்தல் என் கவனத்தைச் சிதறடித்தது. நந்தினியை அழைத்து வரச் செல்வதா இல்லை முதலாளியுடன் சந்திப்பா? யோசிக்கவே சிரமமாக இருந்தது.

"மச்சான் ரெடியாகிடிட்டியா? அந்த ஆள பார்க்கவே பயமா இருக்குடா. கடு கடுனு இருக்காரு."

"5 நிமிசத்துக்கு ஒரு தடவ போன்ல தொங்குற இல்லைனா காணாம போயிடுற பின்ன ஏசாம கொஞ்சுவாங்களா?"

எனது குழுவினரோடு அன்றய சந்திப்பில் படைப்பினை சமர்பித்தோம். அதில் ஒரு நிறைவு கிடைத்ததாக மேனேஜரின் முகத்தில் இருந்த புன்னகையில் அறிய முடிந்தது. என் கைக்கடிகாரத்தைப் பார்த்த போது நேரம் மதியம் 1.

நிறுவணத்தில் அனைவரும் மதிய உணவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். எனக்கு அதில் மனம் சொல்லவில்லை. வீட்டிற்கு தொலை பேசினேன்.

" 'ஹலோ' அம்மாவா?"

''இல்லை நந்தினி பேசுறேன்'' தூக்கி வாரி போட்டது. அதற்குள் வீட்டில் இருக்கிறாளா. காலம் எவ்வளவு விரைவாக உள்ளது!

"அம்மா இருக்காங்களா?" அவள் அம்மாவை அழைத்து தொலைபேசியைக் கொடுத்தாள்.

"டேய் எங்கடா போன?" வாய் திறப்பதற்குள் வாங்கிக் கட்டிக் கொண்டேன்.

" மீட்டிங் இருந்துச்சுமா, அதான் போன் ஆப் பண்ணி வச்சிட்டேன்".

"ஹம்ம்ம்... பரவால... நந்தினி நல்லபடியா வீட்டுக்கு வந்துட்டா?"

"நீங்க தான் பயபட்டிங்க, அவ சரியா 'டேக்சி' ஏறி வந்துட்டா பாருங்க".

"அட போட. நல்ல வேளையா அவ ஃபிரண்ட அங்க பார்த்திருக்கா, அந்த பையன் தான் அழைச்சிட்டு வந்தான்".

எனக்கு தலை சுற்றியது. வீட்டுக்கு போகிறேன் என சொன்னவள் எதற்காக திரும்பி வர வேண்டும். கோலாலம்பூரில் அவளுக்கு யாரைத் தெரியும்? அழைத்து வந்த அந்தக் கேடு கெட்டவன் யார் என்றெல்லாம் சிந்தனை சிதறி ஓடியது.

மதிய உணவு தயாரனதும் வேலை செய்பவர்கள் எல்லோரும் அழைக்கப்பட்டார்கள். நானும் கடமைக்காக சாப்பாட்டு மேசையில் அமர்ந்தேன். மரியாதைக்கு கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு வெளியே சென்றேன். எனது உணவு வேளை ஒரு வெண்சுருட்டு புகைக்கப்படாமல் நிறைவு பெறாது. அன்று அளவுக்கு அதிகமாகவே மன உளைச்சல் என்னை வாட்டி இருந்ததால். வெண்சுருட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது.

மணி 2.30 அலுவலகத்தினுள் நுழைந்தேன். மேசைமீதிருந்த நாட்குறிப்பைப் பார்த்தேன். எதிர் வரும் ஞாயிறு அன்று ஒரு சிகப்பு வட்டம் போட்டு வைக்கப்பட்டிருந்தது. ஆம நினைவிற்கு வந்தது. நளினா ஊருக்கு போவதாக சொன்ன தேதி.

பக்கத்திலேயே அவளது புகைப்படம். சின்னதாக 'ஃபிரேம்' போட்டு மேசை மீது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. என்னிடம் அடம்பிடித்து வைக்கச் சொன்னாள். வேலை நேரத்திலும் நீ என்னை மறக்காமல் இருக்கனும் அப்படினு சொல்வாள்.
இப்போது அதை நினைக்கையில் எனக்குள் லேசான புன்னகை.

இந்த வாரம் நளினா என்னைவிட்டு பிரிந்து போகிறாள். மனதுக்குள் ஏதோ ஒரு வித வலி இருக்கவே செய்தது. பிரிவு பாசத்தின் பிணைப்பு என்று கூட சொல்வார்கள். இக்கனம் மனம் அதை ஏற்க மறுக்கிறது.


மறுபக்கம் நந்தினியை பற்றிய எண்ணங்கள். அவளை அழைத்து வந்த ஆடவன் யார் என்றே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அவளிடம் இதை பற்றி கேட்க எனக்கு உரிமை இருக்கிறதா இல்லையா என்று எனக்கு புரியவில்லை. உரிமை இருந்தும் இல்லாத ஒரு நிலை. 'ச்சே.. என்ன வாழ்க்கை இது' என்றே
வருத்திக் கொள்கிறேன்.

என் அறைக் கதவு தட்டபட்டதும் நினைவுகள் சட்டென்று காற்றில் கரைந்து காணாமல் போனது.

முரளி வந்திருந்தான்.

" ஏன் டா?" என கேட்டேன்.

"உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்."

" அதான் 'பிரசண்டேசன்' முடிஞ்சதே இன்னும் என்ன?"

"வேலை சம்பந்தமா இல்லை, வாழ்க்கை சம்பந்தமா பேசனும்." என்றான்.

எனக்கு மேலும் தலைவலி அதிகரித்தது.

தொடரும்...